பாப்பா நாட்டு கள்ளர்களும் சோழ அரசனும்

பாப்பா நாடு என்பது தஞ்சையில் உள்ள கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் புதல்வரான ராஜாதிராஜ சோழன் காலத்தில் கிளர்ச்சிகளை ஒடுக்க சாளுக்கிய தேசத்தில் மேல் படையெடுக்கப்பட்டது. இந்த போரில் பாப்பா நாட்டு கள்ளர்கள் பங்கேற்று வெற்றி அடைந்ததையும், வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக கட்டப்பட்ட கோயில் பற்றியும் தஞ்சை மராத்தியர் கால செப்பேடான செயங்கொண்ட நாதர் கோயில் செப்பேடு விளக்குகிறது.

பாப்பா நாடு

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதியான பாப்பா நாடு கள்ளர் நாடுகளில் ஒன்று என ந மு வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( பக் 104)

பாப்பா நாடு ராஜேந்திர சோழ வளநாட்டில் பொய்யூர் கூற்றத்தில் உள்ள ஒர் நாட்டு அமைப்பாகும். இந்நாட்டின் குறுநிலமன்னர்களாக விஜய தேவர் பட்டம் கொண்டவர்களும் கோபாலர் பட்டம் கொண்டவர்களும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கள்ளர் மரபினர் ஆவர்.

கிபி 1729 ல் “பொய்யூர் கூற்றத்து பாப்பா நாட்டிலிருக்கும் காணியுடைய அரையர்” என சிங்கவன ஜமீன் விஜய ரகுநாத கிருஷ்ண கோபாலர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
(திருவாடுதுறை ஆதீன செப்பேடு-5)

கிபி 1735ல் “பட்டுகோட்டை சீமையிற் பாளையக்காரர் விசய ரகுநாத மெய்க்கன் கோபாலர் தன்னுடைய முப்பத்திரண்டு கிராமங்கள்” எனும் செப்பேடு வரிகள் பட்டுக்கோட்டை சீமையின் 32 கிராமங்களை கோபாலர் ஆட்சி செய்ததாக கூறுகிறது.( சரஸ்வதி மகால் செப்பேடு -1)

கிபி 1736 ல் “பொய்யூர் கூற்றத்து பாப்பானாடு அரசராக ராமலிங்க விஜயதேவர்” இருந்ததாக தஞ்சை மராத்தியர் கால திருமாஞ்சோலை செப்பேடு குறிப்பிடுகிறது( திருப்பனந்தாள் காசி மடம் செப்பேடுகள்)

கிபி 1757ல் “பொய்யூர்கூற்றத்து பாப்பாக்குடி நாடு சிறுநெல்லிக்கோட்டையில் இருக்கும் நல்லவன் விசயத்தேவர்” என பாப்பா நாடு ஜமீன் குறிக்கப்படுகிறார்.(செயங்கொண்டநாதர் கோயில் செப்பேடு-1)

கிபி 11 ஆம் நூற்றாண்டில் முதல் குலோத்துங்க சோழர் காலத்தில் மன்னார்குடியில் கள்ளர் படைப்பற்று இருந்ததையும், அவர்கள் மன்னை ராஜகோபாலசாமி கோயிலுக்கு கொடை அளித்ததையும் கல்வெட்டு எண் 103 of 1897 தெரிவிக்கிறது.

இவற்றின் மூலம் பாப்பா நாடு கள்ளர்களின் முக்கிய படைபற்றாக இருந்து வந்துள்ளதையும், தொடர்ந்து கள்ளர் குல அரையர்களால் ஆளப்பட்டதையும் அறிகிறோம்.

இராஜதிராஜ சோழனும் சாளுக்கிய படையெடுப்பும்

மாமன்னன் இராஜேந்திர சோழ தேவரின் மூத்த மகன் இராஜாதிராஜ தேவர் கிபி 1018ல் இளவரசு பட்டம் கட்டப்பெற்றான். சோழ தேசத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சாளுக்கியர்கள் அவ்வப்போது கிளர்ச்சிகளை செய்து குழப்பம் விளைவித்து வந்தனர். இராசாதிராச தேவரால் மேலை சாளுக்கியர்களை ஒடுக்க கிபி 1044க்கு பின் மூன்று முறை படையெடுக்கப்பட்டது. மூன்று முறையும் வடுகர்களை புறமுதுகு காட்டி ஒட்ச்செய்துள்ளார் சோழ மன்னர்.

பாப்பா நாட்டார்கள் போர்களம் செல்லுதல்

சாளுக்கியரை ஒடுக்க சோழ மன்னருக்கு உதவியாக பாப்பா நாட்டு கள்ளர்கள் சென்றுள்ளனர். பாப்பா நாட்டார்கள் போருக்கு செல்லும் முன் பாப்பா நாட்டார்களின் காணியில் இருந்த செயங்கொண்டநாதரை வணங்கி விட்டு சென்றுள்ளனர்.
இதைப்பற்றிய தகவல்களை தஞ்சை மராத்தியர் கால செயங்கொண்டநாதர் கோயில் செப்பேடு -2) தருகிறது.

சாளுக்கியரை வீழ்த்தி புலிக்கொடியை ஏற்றுதல்

கிபி 1044ல் சோழ மன்னர் ராசாதிராசன் காலத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் பூண்டூர் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் மேலை சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் மற்றும் அவனுக்கு ஆதரவாக வந்த தெலுங்கு குறுநில மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர். எண்ணற்ற போர்வீரர்களும், பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர். பூண்டூர் நகரத்தை சோழரின் படை அழித்து, கழுதைகளைக்கொண்டு உழுது, வரகு போன்ற புன்செய் தானியங்களை பயிரிட்டது. முடிவில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட வெற்றித்தூண் அங்கு நிறுவப்பட்டது.

தோற்கடிக்கப்பட்ட மற்றொரு சாளுக்கிய மன்னர் ஆகவமல்லன் சமாதான தூது அனுப்பினான். ஆனால் தூதுவர்களின் உடம்பில் ஆகவமல்லன் எவ்வாறு புறமுதுகு காட்டி ஒடினான் என எழுது சோழர்கள் துரத்திவிட்டனர். சாளுக்கியரின் வராக முத்திரை குறிக்கப்பட்ட குன்றுகளில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது.நுளம்பர், சாமுண்டர்,கொம்பையன், வில்வராயன், கூர்ச்சர் போன்ற மன்னர்கள் சரணடைந்தனர்.

ஆகவமல்லன் பெற்கடை எனும் தனது உயர் அதிகாரியோடு மற்ற இரு தூதுவர்களையும் அமைதி உடன்படிக்கைக்காக மீண்டும் தூது அனுப்பினான். சோழர்கள் அவர்களில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்தும், ஆகவமல்லன் என பெயரிட்டும் மற்றவனுக்கு பெண் ஆடையை உடுத்தி ஆகவமல்லி என அவனது உடம்பில் எழுதி துரத்தினர். சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தை கைப்பற்றி, அரண்மனைகளை தரைமட்டமாக்கி அங்கே வீரஅபிஷேகம் செய்துக்கொண்டு வீரராஜேந்திரன் எனும் பட்டத்தை சூட்டிக்கொள்ளப்பெற்றான்.

(சோழர்கள்: நீலகண்ட சாஸ்திரி பாகம் 1 பக்கம் 346-347)

போர்வெற்றியும் பாப்பா நாட்டு கள்ளர்களின் நன்றிக் கடனும்

சாளுக்கியருக்கு எதிரான போரில் பங்கேற்ற பாப்பா நாட்டு கள்ளர்கள் பற்றிய தகவல்களை தஞ்சை மராத்தியர் கால செயங்கொண்டநாதர் கோயில் (செப்பேடு -2) தருகிறது. இதன் காலம் கிபி 1758 ஆகும்.

செப்பேட்டில் பாப்பா நாட்டின் சிறப்புகள் தரப்பட்டுள்ளது.
மல்லாரி விருதுள்ள நாடு, அடைக்கலங்காத்த நாடு, கடலேழுவில்க் கடைக்காவல் கொண்ட நாடு, வில்லுக்கு விசையனைப்போலவும், சொல்லுக்கு அரிச்சந்திரனைப் போலவும், அழகுக்கு மன்மதனை போலவும், குதிரைக்கு நகுலனைப்போலவும், யானைக்கு தேவேந்திரனைப் போலவும் , அறிவுக்கு அகத்தியனைப் போலவும், தர்மத்துக்கு கர்ணனை போல புகழ்பெற்ற நாடு” என புகழப்பட்டுள்ளது.

” வளவன் பல்லவதரையன் முன்பாக கல்லூர் நெல்லூர் வெட்டி செயங்கொண்டநாடு பொய்யூர் கூற்றத்து பாப்பாநாடு” எனும் வரிகள் சோழ மன்னரின் சார்பாக வளவன் பல்லவரையன் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் கல்லூர் பகுதிகளை (சாளுக்கிய பகுதிகள்) போரிட்டு வெற்றிக்கொண்ட நாடு என போற்றப்பட்டுள்ளது.

” அம்பலம்பனி நிமித்தம் நாட்டார் பொற்கொது சுவாமிக்கு பிராத்தினை பண்ணிக்கொண்டு போயி கல்லூர் நெல்லூரும் வெட்டி அபித்துக்கனியும் மரத்தோட கொண்டுவந்த படியினாலே நிகரம் அமித்துக் கோயிலும் கட்டிவிச்சி செயங்கொண்டநாதர் என அதற்கு பூசைக்கு நடத்த வேண்டியதுக்கும் ” எனும் வரிகள் விளக்குவது யாதெனில், சுவாமியிடம் வேண்டிக்கொண்டு சாளுக்கிய படையெடுப்பில் பங்கேற்ற பாப்பா நாட்டார்கள் போரில் வெற்றி அடைந்ததால் சுவாமிக்கு கோயில் அமைத்து அதற்கு செயங்கொண்டநாதர் என பெயரிட்டு பூசைகள் நடந்து வர ஏற்பாடுகள் செய்தததாக தகவல் தரப்பட்டுள்ளது.

இந்த கோயில் பாப்பா நாட்டார்களுக்கு முழு உரிமையாக இருந்ததற்கு ஆதாரமாக செயங்கொண்ட நாதர் செப்பேடு (கிபி 1757) உள்ளது. இந்த செப்பேட்டில் ” பாப்பா நாட்டவர்களுக்கு காணியாக இருக்குற செயங்கொண்டனாத சுவாமியாருக்கு தர்ம சாதனப்பட்டயம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில்

இக்கோயில் ராஜாதிராஜ சோழர் கால கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழீஸ்வரம் என அழைக்கப்பட்டது. ஜெயங்கொண்ட சோழன் என பட்டம் கொண்ட ராஜாதிராஜ சோழனால் கட்டப்பட்டது.

( Temples of middle cholas, Balasubramanian /page 358)

இந்த கோயிலுக்கு பாப்பாநாடு ஜமீன்களும், சிங்கவனம் ஜமீன்களும் பல கொடைகளை அளித்துள்ளனர். பாப்பா நாட்டவர்கள் தொடர்ந்து இக்கோயிலுக்கு தங்களது ஆதரவை அளித்து வந்துள்ளனர். இந்த கோயில் 19 ஆம் நூற்றாண்டு வரை பாப்பாநாடு சமீன்களின் பராமரிப்பில் இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் சிதிலமடைந்த பின் பாப்பாநாடு ஜமீனால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பாப்பாநாட்டு சமீன்தார் ஒருவரின் சிற்பம் வழிபாட்டில் உள்ளது.சிவலிங்கத் திருமேனிக்கு முன் இவரது சிற்பம் வழிபாட்டை பெறும் சிறப்பை பெற்றுள்ளது(தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் : புலவர் இராசு, பக்கம் 134)

சாளுக்கிய படையெடுப்புடன் தொடர்புடைய கள்ளர் பட்டங்கள்

கள்ளர்களின் பட்டப்பெயர்களில் சில சாளுக்கிய மற்றும் வடுக தேச படையெடுப்புகளோடு தொடர்புடையவையாக உள்ளன.அவற்றில் சில:-

1) வில்லவராயர்:வில்வராயன் எனும் வடுக மன்னரை வெற்றிக்கொண்ட சோழர் படையோடு தொடர்புடையது.

2) வேங்கிராயர்:வேங்கி நாட்டின் மீது பெற்ற வெற்றியோடு தொடர்புடையது.

3)வடுகராயர்:வடுகர்களை ஒடுக்கி ஆண்டதோடு தொடர்புடையது

4) கூர்சார்:வடுக கூர்சர நாட்டின் மீது நடந்த படையெடுப்போடு தொர்புடையது.

5)செயங்கொண்டார்:செயங்கொண்ட சோழனோடு தொடர்புடையது

6)சீட்புலியார்/சிலிப்பியார்: ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு அருகில் உள்ள ஒரு பகுதி சீட்புலி. இந்த பகுதியில் நடந்த படையெடுப்போடு தொடர்புடையதாக இந்த பட்டம் அமைந்துள்ளது.

7) தெலிங்கராயர்: தெலுங்கர்களை வெற்றி கொண்டதோடு தொடர்புடைய பட்டம்.

8) துறையாண்டார்: கர்நாடகாவில் உள்ள ஒர் பகுதியின் பெயர் இடைத்துறை. இந்த பகுதியை கைப்பற்றி ஆண்டதோடு தொடர்புடையதாக இப்பட்டத் அமைந்துள்ளது.

9) சக்கரநாட்டார்: வேங்கி நாட்டில் விசாகப்பட்டினத்திற்கு வடமேற்கில் இருந்த பகுதி சக்கரகோட்டம் என அழைக்கப்பட்டது. இப்பகுதியை கைப்பற்றி ஆண்டவர்கள் சக்கரநாட்டார் என பட்டம் தரிக்கலாயினர்.

10)வையராயர்: வேங்கி நாட்டில் இருந்த வைராகரம் எனும் பகுதியின் வெற்றிகர படையெடுப்போடு தொடர்புடையதாக அமைகிறது.

11) ரேணாடாண்டார்: தெலுங்கு சோழர்கள் வாழந்த பகுதியான ரேணாட்டை வெற்றி கொண்டதோடு தொடர்புடையது.

12) சிந்துரார்: சாளுக்கிய தேசத்தின் ஒரு பகுதியான சிந்துவாடியை போரிட்டு வென்றதோடு தொடர்புடைய புகழ்மொழி.

13)சாளுவராயர் : சாளுவ தேசத்தை வெற்றிகொண்டு ஆட்சி செய்ததை குறிப்பிடுகிறது.

பாப்பா நாட்டு கள்ளர்களின வீரத்திற்கு எடுத்துக்காட்டாக, நமது முன்னோர் சிந்திய குருதியின் நினைவாக இன்றும் பொலிவோடு அமைந்துள்ளது மன்னை செயங்கொண்டநாதர் கோயில். முன்னோரின் தியாகத்தை போற்றுவோம்! ! நன்றி!

Article by: www.sambattiyar.com

Total views 1,946 , Views today 1 

Author: admin

3 thoughts on “பாப்பா நாட்டு கள்ளர்களும் சோழ அரசனும்

  1. நன்றி பங்காளி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *