
புதுக்கோட்டை மாவட்டம் கிபி 1686 முதல் கிபி 1948 வரை தனி சமஸ்தானமாக தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. கிபி 1686 ல் புதுக்கோட்டையின் மன்னராக பதவியேற்ற ரகுநாதராய தொண்டைமான், பல்வேறு பாளையங்களை தாக்கி புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைத்தார். இந்நிலையில் கிபி 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தஞ்சை நாயக்க மன்னரால் ஜகன்னாத ஐயங்கார் என்பவருக்கு பெருங்களூர் அருகில் உள்ள வாராப்பூர் பாளையம் அளிக்கப்பட்டது.

ஐயங்காரை வீழ்த்திய பறையர் குல வீரர்

கிபி 1730 ல் புதுக்கோட்டை மன்னராக விஜய ரகுநாத ராய தொண்டைமான் பதவியேற்றார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எல்லையை விரிவு படுத்த எண்ணிய மன்னர், வாராப்பூர் பாளையத்தை கைப்பற்ற முடிவு செய்தார். கிபி 1735 ஆம் ஆண்டில் வாராப்பூர் பாளையத்தை ராகவ ஐயங்கார் என்பவரின் வசம் இருந்தது. ஐயங்காரை வீழ்த்த ஆதி தமிழ் குடி பறையரை தேர்வு செய்தார் தொண்டைமான் மன்னர். காக்கை திருமன் எனும் பறையனாரை அனுப்பி, வாராப்பூர் பாளையத்தின் தலைவரான ராகவ ஐயங்காரை வெட்டி வீழ்த்த பணித்தார். காக்கை திருமன் மன்னரின் ஆணைப்படியே , வாராப்பூர் பாளைய தலைவரான ராகவ ஐயங்காரை வெட்டி வீழ்த்தினார். வாராப்பூர் பாளையம் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.
பறையனாருக்கு மன்னர் அளித்த மரியாதை
காக்கை திருமனின் வீரத்தை கண்டு வியந்த மன்னர், அவருக்கு என்ன வெகுமதி வேண்டும் எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த காக்கை திருமன், தொண்டைமான் நாட்டில் பிராமணர்களுக்கு இனாமாக நிலம் அளிக்கும்போது பயன்படும் அளவுகோலுக்கு தனது பாத அளவை பயன்படுத்த வேண்டும் என வேண்டினார்.
காக்கை திருமனின் தியாகம்

தொண்டைமான் நாட்டில் அக்காலத்தில் ஒரு குழி அளவுள்ள நிலம் என்பது 14 சதுர அடிகளை கொண்டதாகும். பிராமணர்களுக்கு நிலம் இனாமாக அளிக்கும்போது, சதுர அடிக்கான அளவுகோலுக்கு காக்கை திருமனின் பாத அளவு கொடுக்க முடிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் அளவு எடுப்பதற்கு முன், காக்கை திருமன் தனது பாதத்தை வெட்டி காலின் முன்னே வைத்து அதிகமான அளவுகோலை கொடுத்தார். இந்த நில அளவுகோல் வழக்கத்தில் உள்ளதை விட அதிக நீளம் கொண்டதாக இருந்தது. எனினும் காக்கை திருமனின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய மன்னர் , காக்கை திருமன் கொடுத்த பாத அளவிலேயே பிராமணர்களுக்கான இனாம் நிலங்களை அளிக்க ஆணையிட்டார். காக்கை திருமன் தனது பாதத்தை வெட்டி வைத்து அளவுகோலை அதிகரித்ததால் பிராமணர்கள் அதிக நிலங்களை பெறலாயினர்.

பிராமணர்களுக்கு அளிக்கப்படும் நிலத்தை, காக்கை திருமன் பறையனாரின் பாத அளவுகோலால் அளக்குமாறு செய்து காக்கை திருமனாருக்கு நிலைத்த பெருமையை உருவாக்கினார் தொண்டைமான். மேலும் காக்கை திருமனாரின் பாத அளவை, சித்தன்னவாசல் மலைப்பகுதியில் கல்வெட்டாக செதுக்கி வைத்தார். பிராமணர்களுக்கு அளிக்க பயன்படும் அளவுகோலை அதிகரிக்க தனது பாதத்தை வெட்டிக்கொண்ட காக்கை திருமனின் பெருந்தன்மையும், தியாகமும் வியக்க வைக்கிறது.
தொண்டைமான் மன்னர்கள் அளித்த பதவிகள்

புதுக்கோட்டை மன்னர் காலத்தில் மக்களிடம் வரிவசூல் செய்து கிராமங்களை நிர்வகிக்க மிராசுதார்களை நியமிக்கப்பட்டனர். மிராசுதார்களின் சார்பாக வரிப்பணத்தை வசூலித்து , பாதுகாத்து வைத்திருக்கும் பணியை நோட்டக்காரர்கள் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் பறையர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு சமஸ்தானத்தில் இருந்து சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல வெட்டியார்கள் நில அளவை சமந்தமான பணிகளில் சமஸ்தானத்தினால் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பறையர்கள் பற்றி குறிப்பிட்டுள்ள புதுக்கோட்டை சமஸ்தான மேனுவல், இவர்களை மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் என கூறுகிறது.
ஆதி திராவிடர்கள் முன்னேற்றத்தில் புதுக்கோட்டை தொண்டைமான்கள்


1894 ஆம் ஆண்டு மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் காலத்தில், ஆதி திராவிடர்களுக்கான சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டது.
மேலும் ஆதி திராவிடர்களுக்கான நடுநிலைப்பள்ளி உருவாக்கப்பட்டு இலவச கல்வியுடன், மாத உதவித்தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. 1921ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஆதி திராவிடர்களுக்கென 19 பள்ளிகள் இருந்தது.


1910ல் ஆதி திராவிட நெசவாளர்களின் பிள்ளைகளுக்காக நெசவுப் பள்ளிகள் தொடங்கப்பட்டது.

1914 ஆம் ஆண்டு மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் காலத்தில், ஆதி திராவிடர்களுக்காக 12 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டது.

1927 முதல் புதுக்கோட்டை சட்டமன்ற சபையில் ஆதி திராவிடர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு, ஆதி திராவிடர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

1935 ல் மன்னர் ராஜகோபால தொண்டைமான் காலத்தில், மன்னர் கல்லூரியின் தங்க விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர்கள் தங்கிப் படிக்க இலவச விடுதி தொடங்கப்பட்டது. 1935 முதல் ஆதி திராவிட மாணவர்கள் மற்ற அனைத்து சாதியினரிடமும் ஒரே பள்ளியில் சமமாக கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டது. ஆதி திராவிடர் பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

1936 முதல், உதவித்தொகை பெறுவதில் ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

31 ஜனவரி 1948 அன்று காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியின் பன்னிரென்டாம் நாள் காரியத்தன்று, புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய அனுமதி தந்து ஆணையிட்டார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர்கள் பறையர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளனர். பறையர் குல வீரர் காக்கை திருமனின் தியாகத்தை நாடே அறியும் வகையில் செய்தனர். சமூக கட்டமைப்பில் பறையர்களுக்கு உயரிய பதவிகளை வழங்கி பெருமை படுத்தியுள்ளனர். புதுக்கோட்டை சட்டமன்ற சபையில் பறையர்களை உறுப்பினராக்கி அழகு சேர்த்துள்ளனர். இன்றைய அரசியல் சூழ்ச்சிகளால் தாழ்த்தப்பட்டவர்கள் என முத்திரை குத்தப்பட்டு, முக்குலத்தோரை எதிரியாக காட்ட முயற்சித்தாலும், , உண்மையில் முக்குலத்தோரும் பறையர்களும் அன்றுபோல இன்றும் ஒற்றுமை உணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர். தமிழராக ஒன்றிணைவோம்! தமிழர் அடையாளங்களை காப்போம்!
Article by : www.sambattiyar.com
Total views 2,603 , Views today 3