முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் அமைச்சர் நிலையில் உயர் பதவிகளை வகித்தவர் ஈராயிரவன் உத்தம சோழப் பல்லவராயர். இவர் சோழநாட்டு தென்கரை பாம்புணிக்கூற்றத்து அரசூருடையான் என குறிப்பிடப்படுகிறார். பாம்புணிக்கூற்றம் என்பது இன்றைய மன்னார்குடி பகுதியை குறிப்பதாகும். இப்பகுதியில் அமைந்துள்ள பாம்பணி நாதர் கோயில் பாம்புணி கூற்றத்தின் பெயரில் அமைந்துள்ளதாகும். இவரைப் பற்றி தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளும், ஆனைமங்கல செப்பேடும் குறிப்பிடுகிறது.
முதலாம் ராசராசசோழனின் 29 ஆம் ஆண்டை சேர்ந்த தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு இப்பல்லவராயரை ” ஸ்ரீ ராஜராஜதேவர் பெருந்தனம் ஈராயிரவன் பல்லவயனான மும்முடி சோழ போசன்” என குறிப்பிடுகிறது.

இப்பல்லவராயர் தஞ்சை பெரிய கோயிலுக்கு சண்டிகேஸ்வரர் சிற்பம் ஒன்றை செய்து அளித்துள்ளார்.இச்சிற்பத்துக்கு பொன் நகைககளையும் இவர் அளித்துள்ளதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் வட ஆர்க்காட்டில் அமைந்துள்ள சோமநாதர் கோயிலுக்கு கொடை அளித்ததையும் முதலாம் ராஜராஜன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. முதலாம் ராசராசனின் ஆனைமங்கல சேப்பேட்டிலும் இப்பல்லவராயர் உயர் அதிகாரியாக குறிப்பிடப்படுகிறார்.

முதலாம் ராஜேந்திர சோழனின் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் ஈராயிரவன் பல்லவராயன் தஞ்சை பெரிய கோயிலுக்கு அளித்த சண்டிகேசுவரர் சிற்பத்திற்கு பல தரப்பினரால் செய்யப்பட்ட கொடைகள் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் இவர் ” பெருந்தனம் ஈராயிரவன் பல்லவன் மும்மடிசோழ போசனான உத்தமசோழப் பல்லவராயன் எழுதளுவித்த சண்டிகேசுவரருக்கு” என குறிப்பிடப்படுகிறார்.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவரது அமைச்சராக பதவி வகித்தவர் வல்லபப் பல்லவராயர் ஆவார். இவர் விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டில் உள்ள கடம்பங்குடியை சேர்ந்தவர். இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை குறிக்கும். இவர் முதல் குலோத்துங்க சோழனின் தலைமை அதிகாரியாக திகழ்ந்துள்ளார். இவர் கோதாவரி ஜில்லா பீமாவரத்தில் உள்ள திருமால் கோயிலுக்கு கொடை அளித்துள்ளார்.

கிபி 1015 ஆம் ஆண்டை சேர்ந்த கோதாவரி பீமவர்ம கல்வெட்டில் இவர் ” விருதராஜ பயங்கர வளநாட்டை சேர்ந்த மண்ணி நாட்டை சேர்ந்த கடம்பங்குடியுடையான் வல்லப பல்லவராயர்” என குறிப்பிடப்படுகிறார். (Ep ind vol 6- No 20)

கிபி 1090 ஆம் ஆண்டை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழனின் சிறிய லெய்டன் செப்பேட்டில் ” இப்படி சந்திவிக்ரஹி ராஜவல்லபப் பல்லவரையனோடுங்கூட இருந்து தாமரசாசனம் பண்ணிக்கொடுவென்று அதிகாரிகள்” எனும் வரிகள் வல்லப பல்லவரயனை சந்தி விக்ரஹி என குறிப்பிடுகிறது. சந்தி விக்ரஹி என்பதற்கு அமைச்சர் மற்றும் படைத்தலைவர் என இரு பதவிகளையும் வகித்தவர் என பொருள்படும்.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து மன்னார்குடி கோபாலசாமி கோயில் கல்வெட்டு இப்பகுதியில் கள்ளர்களின் படைப்பற்று இருந்ததை குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் வரும் ” பண்ணினப்படி காடும் நாடும் நகரங்களும் கள்ளப்பற்று மகப்பட” எனும் வரிகள் கள்ளர் படைபற்றை நாடு நகரங்களில் இருந்து வேறுபடுத்தி குறிப்பிடுகிறது.

1883 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் ” தஞ்சையில் பல்லவராயர்கள் கள்ளர் மரபினரின் ஒரு பிரிவாக வாழ்கின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றும் டெல்டா மாவட்டங்களில் ராஜ ராஜ சோழனின் அமைச்சர்கள் வழிவந்த கள்ளர் குல பல்லவராயர்கள் அத்திவெட்டி ,நாகாச்சி, விண்ண மங்கலம், பவனமங்கலம், மதுக்கூர் புலவஞ்சி, ஒரத்தநாடு( தென்னமநாடு) மூவாநல்லூர், கண்ணுகுடி, செயங்கொண்ட சோழபுரம், ரங்கநாதபுரம், ஒரத்தநாடு-புதூர், பட்டுக்கோட்டை, குலமங்கலம், திருக்காட்டுப்பள்ளி முதலிய இன்னும் பல ஊர்களில் பெரும் நிலக்கிழார்களாக வாழ்ந்து வருகின்றனர்.






Article by: www.sambattiyar.com
Total views 1,677 , Views today 1