புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் முன்னோர் தொண்டை மண்டலத்தில் உள்ள தொண்டைமான் கோட்டை எனும் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் யானைகளை பயிற்றுவித்து போருக்கு தயார் செய்யும் கலையில் வல்லவர்களாக விளங்கினர். தொண்டை மண்டலத்தில் இருந்து தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவர் வெங்கடசால பல்லவராயர் என்பவருடன் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த தொண்டைமான்களின் ஒரு பிரிவினர் அம்புக்கோயில் பகுதியில் குடியேறினர்.

அழும்பில் என அழைக்கப்பட்ட ஊரே பிற்காலத்தில் அம்புக்கோயில் என திரிந்தது. கிபி 1351 ஆம் ஆண்டை சேர்ந்த திரிபுவன சக்கரவர்த்தி சீவல்லப பாண்டியன் காலத்து கல்வெட்டு அம்புக்கோயில் சிவன் கோயிலில் உள்ளது. இக்கல்வெட்டில் ” இராசராசவளநாட்டு பன்றியூர் நாட்டு அழும்பில்” என அம்புக்கோயில் குறிப்பிடப்படுகிறது. இதே கல்வெட்டின் கடைசியில் ” ஆனை தொண்டைமானாரும் உடப்பன் குளந்தைராயரும்” எனும் வரிகள் அம்பு நாட்டு தொண்டைமானை குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் குளந்தரையரும் இன்று அம்புநாட்டில் தென் தெரு குப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பெயரில் குழந்திரான்பட்டு எனும் ஊர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அம்பு நாட்டு தொண்டைமான்களின் முன்னோரை குறிப்பிடும் முதல் கல்வெட்டாக ஆனை தொண்டைமான் பற்றிய கல்வெட்டு அமைந்துள்ளதாக புதுக்கோட்டை கெசட்டர் குறிப்பிடுகிறது.( Gazetter of pudukkottai pg 790)

அம்புக்கோயிலில் கிடைத்த பாண்டிய மன்னர் சுந்தரப்பாண்டியன் காலத்து மற்றொரு கல்வெட்டு ” அழும்பில் அஞ்சுகுடி அரையர்கள்” என குறிப்பிடுகிறது. அம்புநாட்டில் இருந்து ஆட்சி செய்த கள்ளர் குல அரையர்கள் தங்களை அஞ்சுகுடி அரையர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இது பற்றி குறிப்பிடும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் ” அம்புநாட்டில் குடியேறிய கள்ளர் மரபினர் தங்களோடு ஐந்து குடிகளை அழைத்து வந்து குடியமர்த்தியதாகவும், அதனால் தங்களை அஞ்சுகுடி அரையர்கள் என அழைத்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறது. ( General history of pudukkottai state pg 118)

கிபி 1266 ஆம் ஆண்டை சேர்ந்த வீரப்பாண்டியதேவர் கால அம்புக்கோயில் கல்வெட்டில் ” பன்றியூர் நாட்டு அழும்பில் நாயனாருக்கு” பாண்டிய மன்னன் அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது. ” திருவாய்மலர்ந்தருளினபடிக்கு பல்லவராயன் எழுத்து “ எனும் வரிகள் அம்புக்கோயிலில் குடியேறிய இருந்த பல்லவராயர்கள் குறிக்கும். இன்றும் அம்புநாட்டில் பல்லவராயர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1796ல் வெளியான விசயரகுநாதராய தொண்டைமானின் கூடலூர் செப்பேட்டில் ” பன்றிசூழ் நாடு அன்பில் தெற்கலூரில் இருக்கும் காணியுடைய அரசர் மக்களில் இந்திர குல வங்கிசன் அன்பில் நாடன் தென்கோடியதிபன் வடகரை புலி வாகை மாலை புயனான ஸ்ரீமது திருமலை தொண்டைமான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டியர் காலம் முதல் அம்பு நாட்டில் அஞ்சுகுடி அரையர்கள் என்றும் அரசர் மக்கள் என்றும் தொண்டைமான்களும் பல்லவராயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உணர்த்துகின்றன. தொண்டை மண்டலத்தில் இருந்து குடியேறிய தொண்டைமான்களின் ஒரு பிரிவினர் அறந்தாங்கியிலும் மற்றொரு பிரிவினர் பதினேழாம் நூற்றாண்டில் புதுக்கோட்டையிலும் அரசாட்சி அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Article by: www.sambattiyar.com
Total views 2,099 , Views today 1