Alexanders east india and colonial magazine எனும் புத்தகம் கிபி 1835 ல் லண்டனில் வெளியிடப்பட்டது. இதே தகவல் பிரிட்டீசார் காலத்தில் வெளியிடப்பட்ட Madura manual எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் பக் 220 ல் கேப்டன் ரூம்லே எனும் ஆங்கில தளபதியால் வீழ்த்தப் பட்ட வெள்ளளூர் கள்ளர்களை பற்றிய தகவல் ஒரளவுக்கு விரிவாக உள்ளது. இவர்களின் தியாக வரலாற்றை அலசுவோம்.
ரூம்லேயின் முதல் தாக்குதல்

- நவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பிய யூசுப்கான் கிபி 1764 ல் கொல்லப்பட்டான்.
- யூசுப்கானின் இறப்பிற்கு பிறகு மதுரை நவாபின் கட்டுப்பாட்டில் வந்தது. யூசுப்கான் அடுத்த 5 ஆண்டுகளில் மற்ற பாளையக்காரர்களை அடக்க ஆரம்பித்தான்.
- கள்ளர்கள் நவாபின் மேலாண்மையை ஏற்காமல், தன்னாட்சி புரிந்து வந்தனர்.இதனால் கள்ளர்களை ஒடுக்க எண்ணிய நவாப் முதலில் மேலூரை குறி வைத்தான்.
- ஆங்கில தளபதி கேப்டன் ரூம்லே தலைமையில் 5 Battalion சிப்பாய்களையும், 1500 குதிரைப்படை வீரர்களையும் அனுப்பினான் நவாப்.
- மேலூரில் முகாமிட்ட ரூம்லே, மேலூர் நாட்டார்களுக்கு , அடிபணிந்து வரி செலுத்துமாறு தூது அனுப்பினான். இரு வாரங்கள் முகாமிட்டு இருந்தான். ஆனால் மேலூர் கள்ளர்கள் அடிபணிய மறுத்து விட்டனர். யாருக்கும் வரி செலுத்த முடியாது என கூறிவிட்டனர். வெள்ளையர் சிப்பாய்களின் மீதும் தாக்குதல்களை தொடங்கினர்.
- இதன்பின் மேலூரை விட்டு அகன்ற ரூம்லே தன் படையுடன் வெள்ளளூர் நாட்டை அடைந்தான்.வெள்ளளூரை சுற்றி வளைத்து நாட்டார்களை தங்களிடம் வந்து அடிபணிந்து செல்லுமாறு மிரட்டினான்.
- கிராமத்தை சுற்றியுள்ள முட்புதர்களில் கள்ள நாட்டார்கள் திரண்டனர்.
- ஆனால் வெள்ளளூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து, தங்களது இயல்பான முரட்டு தனத்துடன், வெள்ளையர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்ப தொடங்கினர். தங்களது ஆயுதங்களை கொண்டு தாக்க தயாராயினர்.
- முட்புதர்களையும், வீடுகளிலும் ஆங்கிலேயர் நெருப்பு வைத்தனர்
- வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியேறி ஒரிடத்தில் திரண்டனர்.
- இந்த சமயத்தில் கள்ளர்களை நோக்கி தாக்குதலை தொடங்கினான் கேப்டன் ரூம்லே. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 3000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.
- வெள்ளளூர் நாட்டின் முக்கிய நாட்டார்களை கைது செய்து கொண்டு சென்றனர். கைதிகளுடன் மேலூரை அடைந்தான் ரூம்லே. வெள்ளளூரில் நடந்த பெரும் படுகொலையை அறிந்து மேலூர் நாட்டார்கள், ரூம்லேயோடு ஒத்துழைக்க தற்காலிகமாக சம்மதித்தனர்.
- மல்லாக்கோட்டை மற்றும் சிவகங்கை பிரதிநிதிகள் செலுத்தும் வரியின் அளவு மற்றும் சட்டங்களை தாங்களும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர்.
- பல நூற்றாண்டுகளாக தன்னரசாக திகழ்ந்த கள்ளர் நாடுகள் ரூம்லேயின் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு பின் அமைதியான வாழ்வை தற்காலிகமாக வாழத் தொடங்கினர். ஆனால் இது நீண்ட நாள் நீடிக்கவில்லை.
ரூம்லேயின் இரண்டாவது தாக்குதல்

- சிறிது காலத்திற்கு பின் நவாபின் பிரதிநிதி முகமது கோலி என்பவன் மேலூர் நாட்டுக்கு அமில்தார் பதிவியில் இருந்தான்.
- வெள்ளளூர் நாட்டில் சில ஆய்வுகளை செய்ய 10 பியூன்களை(Peon) அனுப்பினான் கோலி.
- வெள்ளையனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை விரும்பாத கள்ளர்கள் கடுங்கோபத்தில் பழிவாங்க காத்திருந்தனர்.
- இதையடுத்து வெள்ளளூருக்கு வந்த 10 பியூன்களையும் கள்ளர்கள் கொன்று விட்டனர். இந்த சண்டையில் கிராமம் தீக்கிரையானது.
- அங்கிருந்த கள்ளர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து, தொண்டைமான் சீமையில் குடியேற முயற்சித்தனர்.
- அதற்குள் கள்ளர்கள் செய்த படுகொலையை அறிந்த ரூம்லே பெரும் படை ஒன்றை வெள்ளூர் நோக்கி அனுப்பினான்.
- கள்ளர்களுக்கும் ரூம்லே படைக்கும் நடந்த மோதலில் நவீன ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் எதிர்த்து போரிட்ட 2000 வெள்ளளூர் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
- இதற்குபின் கள்ளர் நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் சுமூக வாழ்க்கை வாழ தொடங்கினர்.
- மேலூர் நாட்டில் இருந்து வெள்ளையர் படை திரும்பி அழைக்கப் பட்டனர்.
- சில ஆண்டுகள் அமைதியாக இருந்த கள்ளர் நாடுகள் மீண்டும் ஐதர் அலியின் தூண்டுதலில் கிளர்ச்சியை தொடங்கினர்.

வெள்ளளூர் நாட்டு கள்ளர்கள், தங்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லாத போதிலும் பாரம்பரிய ஆயுதங்களை கொண்டு வெள்ளையரை எதிர்த்து வீர சமர் புரிந்து 5000 ஆன்மாக்களை தியாகம் செய்தனர். மன்னர்களை பற்றி புகழ்பாடும் இந்த சமூகம் சாதாரண நாட்டார்களின் புரட்சியை பற்றி பேச ஏனோ விரும்பவில்லை. 379 பேர் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி பேசும் வரலாற்று ஆய்வாளர்கள், ஏனோ இந்த இந்த பாமர கள்ளர்களின் உயிர் தியாகத்தை பற்றி பேச முயற்சிக்கவில்லை.
Article by: www.sambattiyar.com
Total views 1,958 , Views today 1